காதணி
எப்போதும் அவள் மேனித் தொடும்
பொருட்களின் மீது மிகையான
பொறாமை எனக்குண்டு.
அன்றும் அவ்வாறு கடை வீதியில்
கடந்து செல்லும் போது காதணிகள்
பார்த்து நின்றுவிட்டாள்.
கண்களில் தேடி ஒன்றை எடுத்து
என்னிடம் எப்படி இருக்கிறது என்றாள்.?
எனக்கு தெரியவில்லை என்றேன்.
கோவமடைந்து எனக்கு பிடித்திருக்கிறது,
எடுத்துக்கொள்கிறேன்
என்றவாறு அணிந்திருந்த புல்லாக்கை
கழட்டி புதியதை அணிந்தாள்.
அழகாக இருக்கிறது என்றேன்.
ஒரு ஓரப்பார்வை வைத்தாள்.
ஆமடி, என்றாவது நீ நாரையும், முள்ளையும்
ரசித்ததுண்டா.? பூவோடு தானே அவை மணக்கும்.
பூவடி நீ உன்னோடு எது இணைந்தாலும்
அவை மணக்கும், நான் உட்பட என்றேன்.
உள்ளூர சிரித்தாலும், வெளியில் காட்டாமல்
போட இதையெல்லாம் நீ வக்கனையாகதான்
பேசுவாய் என்று சொல்லி நகர்ந்தாள்.
ஆம். பூ தான் அவள்
அவளால் தான் நான் மணக்கிறேன்
என்று மனத்தோடு மறுமுறை நினைத்து
மறைத்தேன்.
Comments
Post a Comment